பக்கங்கள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தேச விடுதலைக்கு பணிசெய்தோருக்கும், செய்வோருக்கும் தமிழ் தேசியம் வழங்கும் அதி உயர் விருது "தமிழின துரோகி"



முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத் தமிழினம் மிக மோசமானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் வழிகாட்டியாக- அவர்களின் உரிமைக்குரலாக ஓயாமல் இயங்கிய புலிகள் இயக்கமும், அதன் தலைமைத்துவமும் இல்லாது போயுள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை இது.

தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற அச்சம் இப்போது உலகெங்கும் வலுப்பெறத் தொடங்கி விட்டது. இதற்குக் காரணம், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் புலிகள் இயக்கம் சந்தித்த பேரழிவுக்குப் பின்னர்- அதனைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தான்.

* நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி கிளியே

கிருஸ்ணா அம்பலவாணர்
- இன்போ தமிழ் குழுமம் -




கேபி மீது விமர்சனம் செய்தல் என்பது ஒருவகையில் தமிழீழத் தேசியத் தலைமையை விலைபேசுவதற்க்கு ஒப்பானது

* செத்தால் மாவீரன், சிறைப்பட்டால் துரோகி இது இன்றைய வரைவிலக்கணம்.

* செத்தவனையும் சிறை சென்றவனையும் விவாதிப்பதற்க்கு எவருக்கும் உரிமை இல்லை இது கரிகாலன் தத்துவம்

இனி ...

தமிழின துரோகி முத்திரை -இலவசம்

* கொஞ்ச நாட்களுக்கு முன்பு தான் இந்த முத்திரை தயாரிக்கப்பட்டு கடைத் தெருவுக்கு வந்தது. இதற்கு விலை வைத்திருந்தால் கூட யாருமே வாங்க தயங்கியிருப்பார்கள்.. இலவசம் என்று சொன்னவுடன் முத்திரையை அனைவரும் வாங்கினார்கள்.. கலைஞர் மு.கருணாநிதி ராசியானவர் அச்சாரம் போட்டார் முதல் முத்திரை அங்கு குத்தப்பட்டது, பின்பு தமிழின உணர்வாளர் ஜயா நெடுமாறன் தொடர்ந்து இலட்சிய வீரர்களுக்கு வழங்கிவந்தார்.

அதிலிருந்து உலகின் அனைத்து தமிழரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தமது கருத்துக்கு எதிர்வினை கொள்வோருக்கு எதிராக அவர்களை வன்மம் செய்து ’தமிழின துரோகி’ முத்திரை குத்தப்பட்டு இணையத்தளங்களினூடாகவும் சில மனிதர்களூடாகவும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது...

* ஈழம், சகோதர யுத்தம் , தேசியத் தலைவர் பிரபாகரன், தேசியத்தலைவரின் வீரச்சாவு, ஈழப்போரின் இறுதி யுத்தமும் தமிழர்களின் எதிர்காலமும், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழக தலைவர்களுக்கான கருத்துருவாக்கம், தமிழீழ மக்களுக்கான எதிர்கால ஆரோக்கியமான செயற்பாடு, என ஏதாவது ஒன்றை சொன்னாலோ ஒன்றை பற்றி பேசினாலோ இது கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

சிறு குறிப்பு உடனிருந்தவர்களுக்கு நினைவுபடுத்துகின்றோம்,

* தேசியத் தலைமைக்கு எதிராகவும், தமிழ் தேசிய விடுதலைக்கும் எதிராக பல எதிர்விளைவுகளை செய்தவர்களுக்கு கூட தமிழீழத் தேசியத்தலைவர் துரோகி என தன் வாயால் சொன்னதே இல்லை. இன்று அந்த தலைவன் புகழ் பாடுவோர் அந்த தலைவனோடு 37 ஆண்டுகள் நடந்து வந்தவர்களையும், தலைவர் சொன்னவற்றை செய்தவர்களையும் தொடர்ந்து அந்த தலைவனின் இலட்சிய கனவை நனவாக்க முனைபவர்களையும் துரோகிகள் என முத்திரை குத்தி அன்னியமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, வேதனையானது அநாகரீகமானது. விடுதலை என்பது சுதந்திர செயற்பாடு அது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கப்படவில்லை.

ஆகவே விடுதலைக்கு பணிசெய்யும் போது செத்தால் மாவீரன், சிறைப்பட்டால் துரோகி......

*
ஏன் இந்த இழிநிலை?

இதற்கெல்லாம் காரணம் என்ன?

எமது நோக்கமும் பயணமும் திசைமாறிச் செல்லத் தொடங்கி விட்டதா?

என்பன போன்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகள் தமிழ் மக்களின் முன் எழத் தொடங்கி விட்டது.

மே 19 ஆம் நாள் நிகழ்ந்த பேரனர்த்தத்தின் பின்னர் உருவாகியுள்ள இந்தச் சூழல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாரியதொரு வெறுமை நிலையை உருவாக்கியிருக்கிறது.

”ஊரு ரெண்டு பட்ட கூத்தாடிக்கு கொண்டாட்டம்”, மாடுங்க சண்ட போட்ட நரிக்கு கொண்டாட்டம்..

முள்ளிவாய்க்காலில் எமது தமிழீழப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிருந்த நேரத்திலும் வன்னி முழுவதையும் சிங்களம் கைப்பற்றும் என்பதை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை.

கரந்தடிப் போருக்குள் கூட தமிழீழப் போராட்டம் நுழையப் போவதில்லை என்பதும் மாறாக பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்கின்ற உண்மையும் புரிந்தது.

மே 19 இற்கு பின்பு போராட்டத்தை வழிநடத்த தேசியத் தலைவரும் இல்லை என்கின்ற கோரமான உண்மையும் முன்னே வந்து நின்றது. அந்த நிலையிலும் நம்பிக்கை இருந்தது. தேசியத் தலைவர் தமிழினத்தை ஒன்றுபடுத்தி பலப்படுத்தி விடுதலைக்கான பாதையையும் காட்டி விட்டு சென்றிருக்கின்ற நிலையில் தமிழினம் அவர் இல்லாத நிலையிலும் அந்தப் பாதையில் தொடர்ந்து நடைபோடும் என்று நம்பியிருந்தோம்.

* தேசியத் தலைவருக்கு வெளிப்படையாக அஞ்சலி செய்யமுடியாத நிலை இன்றுவரை நிலவுகின்ற நிலையில்........

இன்று........

தமிழினத்தின் எதிர்காலம் பற்றி பெரும் அச்சத்தில் இருக்கின்றோம்

இந் நிலையில்...

தமிழீழப் புறநிலை அரசை உருவாக்குதல்

இது பற்றிய ஒரு விவாதத்தை இங்கே காணலாம். (தமிழீழ அரசை நடத்தியவர்களால் வெளிநாட்டு அங்கீகாரத்தோடு ஒரு புறநிலை அரசை உருவாக்க முடியாத நிலை இருப்பதனால் புலம் பெயர் நாடுகளில் வாழ்பவர்களினால் “நாடு கடந்த அரசு” ஒன்றை உருவாக்கும் ஒரு சிறப்பான திட்டம் கேபி மற்றும் உருத்திரகுமாரன் தரப்பினரால் முன்வைக்கப்பட்டது)

*
சிலர் புலம்பெயர் மண்ணில் தமிழீழத்துக்கான ஆணை கோரி ராஜதந்திரப் போராட்டம் நடத்தி தமிழீழம் பெறுவது பற்றிப் பேசுகிறார்கள். அப்படி ஒன்றும் நடக்கப் போவது இல்லை என்பது அவர்களுக்கும் தெரியும். ஏதோ பேசி மக்களை ஆறுதல் படுத்த வேண்டுமே என்பதற்காகப் பேசுகிறார்கள்.

தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் மிகப் பலமாக நடந்த வேளையில் நாங்கள் இங்கே ராஜதந்திரப் போராட்டம் நடத்தவில்லை. அதனால் மிகப் பலமாக இருந்தும் கடைசியில் தோல்வியைத் தழுவினோம். இப்பொழுது ராஜதந்திரப் போராட்டம் நடத்துவது பற்றி நாம் பேசுகின்ற பொழுது தமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் இல்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால்தான் ஏதோ ஒரு இலக்கை நாம் அடைய முடியும்.

ஆயுதப் போராட்டத்தை இன்றைய நிலையில் உடனடியாக ஆரம்பிக்க முடியாத நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது சில வேளைகளில் உண்மையாக இருக்கலாம். ஆயுதப் போராட்டம் தமிழர்களை களைப்படையச் செய்து விட்டது என்பதும் உண்மையாக இருக்கட்டும். ஆனால் தேசிய உணர்வை தமது மனதுக்குள் தேக்கி வைத்திருக்கின்ற தமிழினம் தொடர்ந்தும் நசுக்கப்பட்டால் மீண்டும் ஆயுதத்தை ஏந்தும் என்கின்ற அச்ச உணர்வாவது எதிரிகளிடம் இருக்கும்படி நாம் செய்ய வேண்டும். அதற்கு தமிழர்களின் ஒற்றுமை என்பது மிக அவசியம். போட்டி பொறாமைகள் இல்லாத திறந்த விவாதங்கள் அவசியம். ஒருவருக்கு ஒருவர் துரோகிப் பட்டம் வழங்குவதை நிறுத்தி அனைத்துத் தமிழர்களும் “விடுதலை” என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒன்றுபடுதல் அவசியம்.

*
“நாடு கடந்த அரசு” பற்றிய அறிவிப்பு வெளியானதும் சிறிலங்கா அரசும் சில வெளிநாடுகளும் அதை ஓரளவு அச்சத்தோடு பார்த்தன.

இதை குழப்புவதற்கான வேலைத் திட்டங்களை போட்டன. இன்றைக்கு எமது எதிரிகளுக்கு வேலை வைக்காமல் எமது தமிழர்களே நாடு கடந்த அரசை பலவீனப்படுத்தும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

*
பல வல்லரசுகளின் துணையோடு வந்த சிறிலங்காப் படைகளை வென்று, இந்தியப் படைகளை வென்று, வன்னியை மூன்று நாட்களில் கைப்பற்றி, ஆனையிறவை வீழ்த்தி, கடற்படை கண்டு, வான்படை உருவாக்கி உயர்ந்து நின்ற ஒரு இனம் இன்றைக்கு செய்கின்ற கோமாளித்தனங்கள் மிகவும் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் கொடுக்கின்றன. தமிழீழப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் எல்லாவற்றையும் சாதித்தது பிரபாகரன் என்ற தனிமனிதன் மட்டும்தானா? தமிழினத்திற்கு இதில் பங்கேதும் இல்லையா? தமிழினம் என்பது ஒரு குரங்குக் கூட்டமா?

மனிதன் இசைவாக்கம் உள்ள ஒரு பிராணி. மற்ற இனங்களை விட இசைவாக்கம் செய்து தம்மை தக்க வைத்துக் கொள்வதில் தமிழர்கள் சிறந்தவர்கள். ஈழத்தில் நடக்கின்ற இன்றைய சமரசங்கள் அனைத்தையும் இதன் அடிப்படையிலேயே தக்க வைத்தால்தான் நாளைய கிளர்ச்சியும் வரும்.

எனவே ஒருவரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மன நிலையில் அவர்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை ஆதாரமின்றி சுமத்துதலுகான உண்மை காலம் கடந்தாவது சத்தியசொரூபமாய் வெளிப்படும்.

காரணம் தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து ஒரு வரி....

*
சத்தியம் என்றும் சாகாது... சரித்திரம் என்றும் அழியாது... காரணம் வாழ்க்கை அவரது தத்துவம் வரலாறு அவரது வழிகாட்டி......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக